மன்னிப்பாயா
இன்பங்கள் தேடும் உலகில் – நானும்
இறைவா உனைத்தேடுகின்றேன்
துன்பங்கள் ஏனை சூழ்கையில் – ஏனோ
துயரத்தால் உனை வெறுக்கின்றேன்
அங்கங்கள் உருகி வேண்டுகின்றேன் – இறைவா
அடிமை எனை மன்னிப்பாயா
வேசம் கொள்ளும் உலகில – நானும்
பாசம் கொள்ள நினைக்கின்றேன்
நாசம் செய்யும் பலரால் – ஏனோ
மோசம் செய்தும் வாழ்கின்றேன்
நேசத்தோடு கேட்கின்றேன் – இறைவா
தாசன் எனை மன்னிப்பாயா
மோகம் கொள்ளும் உலகில் – நானும்
நல்யாகம் இயற்ற நினைக்கின்றேன்
தாகம் பல என்னுள் வரவ – ஏனோ
தவறு செய்தும் வாழ்கின்றேன்
தேகம் உருக தேடுகின்றேன் – இறைவா
தேடும் எனை மன்னிப்பாயா
மனிதம் கொன்று வாழும் உலகில் – நானும்
புனிதம் கொண்டு வாழ நினைக்கின்றேன்
மீறும் என் உணர்வுகளால் – ஏனோ
மிருகம் கொண்டும் வாழ்கின்றேன்
கூறும் என்வார்த்தைகள் உன்பெயரை – இறைவா
குழந்தை எனை மன்னிப்பாயா
அரவணைக்கா உலகில் – நானும்
அன்புகாட்டநினைக்கின்றேன்
பிறரணைக்க மறுக்கையில் – ஏனோ
பித்துப்பிடித்தும் போகின்றேன்
எனையணைக்கும் உனை வேண்டுகின்றேன் – இறைவா
இனியும் அணைத்தெனை மன்னிப்பாயா
April 23, 2010 at 2:49 pm
மன்னிப்பாயா.,
ஆண்டவர் மன்னித்தாரோ இல்லையோ தம்பி நான் உன்னை மன்னிப்பேன். மனதால் நீ உன்னை திருத்திக் கொள்கிறாய்., ஆதலால் நீ குற்றமற்றவன் ஆகிறாய்.
வாழ்த்துக்கள்
April 23, 2010 at 4:59 pm
எவன் ஒருவன் என்று மனம் திருந்தி தவறுக்காய் வருந்துகிரானோ அன்றே அவன் மன்னிக்கப்படுவான். நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்லதோர் ஆக்கம் என் மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி..
April 26, 2010 at 7:46 am
கண் கலங்க வைத்தது இந்த வரிகள்…… அழகான வேண்டுதல் விஜய்!…. வாழ்த்துக்கள்!…..
April 27, 2010 at 11:44 am
இனிமையான அருமையான வித்தியாசமான கவிதை வரிகள்…
“பிறரணைக்க மறுக்கையில் – ஏனோ
பித்துப்பிடித்தும் போகின்றேன்
எனையணைக்கும் உனை வேண்டுகின்றேன்”
மனதைத் தொடும் கவி வரிகள்…
இனிய ஆக்கம்… தொடர வாழ்த்துகிறேன்….
June 15, 2010 at 9:44 am
//மனிதனொடு சமத்துவத்தைப் பேணுவோம் மனிதத்தில் புனிதம் காண்போம் மனித நேயம் வளர உறுதி பூணுவோம்//
//மனிதம் கொன்று வாழும் உலகில் – நானும்
புனிதம் கொண்டு வாழ நினைக்கின்றேன்
மீறும் என் உணர்வுகளால் – ஏனோ
மிருகம் கொண்டும் வாழ்கின்றேன்//
அன்பு தம்பிக்கு,
எனக்கு என் கனவு தொட்டில் நாவலுக்கு எழுதிய சமர்ப்பணக் கவிதை நினைவில் ஊறுகிறது விஜய். ரம்யமான தளம். மனது நிறையும் கவிதைகள். முத்தாய்ப்பான முதிர்ந்த வரிகள். மனிதனின் மனதை பொதுவாக பறைசாற்றும் கவிதைகள். மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள். சாதிப்பீர்கள்.
மிக நல்ல கவிஞராக வரக் கூடிய ஒரு எழுத்தாற்றல் உங்களிடமும் உண்டு. முயன்று செயலாற்றுங்கள். உங்களின் முயற்சி இச் சமூகத்திற்கு ஓர் உயர்ந்த படைப்பாளியை கொடுக்கட்டும்.
வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்..
வித்யாசாகர்
குவைத்
June 15, 2010 at 11:07 am
அன்பான தங்கள் வாழ்த்துக்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்……
அன்புடன் விஜய்…..